Tuesday 27 November 2012

நம் நாட்டுப் பல்கலைக் கழகங்களால் முடியாதா என்ன?

கில பாராளுமன்றத்தில் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் வெளிநாட்டுப் பல்கலைக் கழக மசோதாவை நிறைவேற்ற, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அல்லும் பகலும் இடைவிடாமல் பாடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளிடமிருந்து கணிசமான அளவிற்கு ஆட்சேபனைகள் இருந்தாலும், காங்கிரஸின் ராஜ்யசபா உறுப்பினரும் தன்னுடைய மறுப்பைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழலில் அயல்நாட்டு பல்கலைக் கழகங்களின் வருகை, உயர் கல்வியின் நிலை மேலும் பாழ்பட்டு விடுமே என்ற தன் கவலையை அவர் தெரிவித்தார். 

உலகத் தரத்தை எட்டுவது என்பது நம்மால் முடியாததல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.பாரத அரசு 1996-ல் டாக்டர் டி.ஒய்.பாட்டீல் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. அதில் நானும் ஒரு உறுப்பினன். இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களோடு இணைந்து செயல்படும் நம் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் நம்மோடு அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் கைகோர்த்து இயங்கும் கல்வி நிலையங்கள் ஆகியவற்றைத் தொடங்குவதற்குரிய வழிமுறைகளைச் சிந்திப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டது. அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களோடு இணைந்து செயல்பட்டால் உயர் கல்வியின் தரம் உயரும் என்பது ஒரு மாயை என்பதற்கு போதிய ஆதாரங்களைத் தந்தேன். அமெரிக்காவிலேயே வெளியிடப்பட்ட அறிக்கையைச் சுட்டிக் காட்டினேன். 

அங்கே 17 வயது நிரம்பிய இளைஞர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு, ஆப்ரஹாம் லிங்கன்தான் மேம்பாட்டுப் பிரகடனத்தை (Emancipation Proclamation) எழுதினார் என்பதே தெரியவில்லை. பாதிப் பேருக்கு ஜோசப் ஸ்டாலின் யார் என்றே தெரியவில்லை. முப்பது சதவிகிதப் பேருக்கு ஐரோப்பிய வரைபடத்தில் பிரிட்டன் எங்கேயுள்ளது என்று குறிக்கத் தெரியவில்லை. உயர் கல்வியின் சரித்திரக் குறிப்பேடு கட்டுரையொன்றில் (Chronicle of Higher Education) இத்தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் போட்டி கடுமையாகி வரும் இந்தக் காலகட்டத்தில், கல்லூரித் தலைவர்கள் அனைவரும் மாணவர்களைச் சேர்க்கும் இயக்குனர்களையெல்லாம், கால்பந்தாட்ட பயிற்சியாளர்களைப் போல் நடத்துகிறார்கள். எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாதவர்களையெல்லாம் வாய்க்கு வந்தபடி ஏசுகிறார்கள். மாணவர்களைக் கவர்வதற்காக தேர்வு மதிப்பெண்களையெல்லாம் திரிக்கிறார்கள். மாற்றுகிறார்கள். தங்கள் எண்ணம் நிறைவேற எதையும் செய்யத் தயங்குவது இல்லை. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் கல்லூரி மாணவர் சேர்க்கை என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை ஆகிவிட்டது. எனவே, ‘அமெரிக்கக் கல்வி முறை உயர்வானது. பிரமாதமானது. அதற்கு முன்னால் நாம் நிற்க முடியாது’ என்று பேசுவதை உடனடியாக நாம் நிறுத்த வேண்டும். 

இதையெல்லாம் மேற்கோள் காட்டி என்னுடைய மாறுபட்ட கருத்தை, காரண காரியத்தோடு பதிவு செய்தேன். அந்தக் குழுவின் தீர்மானம் கடைசியில் கிடப்பில் போடப்பட்டது. இவ்வளவு இருந்தும், பல அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், கண்ணைக் கவரும் கட்டிடங்களிலும் எந்தவித அதிகாரபூர்வமான ஆணையும் இல்லாமல் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படி எந்தவிதமான ஒழுங்கு முறையும் இல்லாமல் கேள்வி கேட்பார் இன்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அயல்நாட்டு பல்கலைக் கழகங்களைப் பற்றி, நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை 1998-ல் தாக்கல் செய்தேன். அது இன்னும் நிலுவையில் உள்ளது. 

நான் எழுதிய முந்தைய கட்டுரையில், இந்தியா பல்வேறு அம்சங்களில் முதலாவதாக விளங்கியது என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். ‘உயர் கல்வியின் தரத்தை உயர்த்தப் போகிறோம்’ என்ற பெயரில், அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களை உள்ளே அனுமதித்தால், குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்டதற்குச் சமமாகும். இதை முதலில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் உள்ள சிலர் புரிந்து கொள்ள வேண்டும். இது தவறான போக்கு என்பதை விளக்க சில வெளிநாட்டு நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கூற விரும்புகிறேன். 

பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் ஒரு கோலாகலமான மாதம் என்பது தெரியும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பிற மேற்கத்திய நாடுகளில் உள்ளோர் கிறிஸ்துமஸைக் கொண்டாடும் உற்சாகத்தில் இருப்பார்கள். 2010 டிசம்பர் 15–ஆம் தேதி லண்டன் மாநகரமே கோபக்கனலில் கொழுந்து விட்டெரிந்தது. காரணம், 25,000 மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு அராஜகத்தின் எல்லைக்கே சென்றனர். சார்லஸ் மன்னர் பயணம் செய்த கார் கட்டுக்கடங்காத கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டது. 

மன்னரின் கையெழுத்தை வாங்குவதற்காகக் காத்திருக்கும் பட்டாளம் என்று அவர்களையெல்லாம் நினைத்து விடக் கூடாது. காவல் துறையினரின் வாகனங்கள் மாணவர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. சீருடைகள் களவாடப்பட்டன. தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் பலரும் காயமடைந்தனர். இந்தப் பதற்றத்திற்குக் காரணம் – 2010-ல் வெளியிடப்பட்ட ப்ரௌன் மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதுதான். இங்கிலாந்திலேயே இப்படியென்றால், அமெரிக்காவின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 
               இந்திய வணிகப் பேரவை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டுப் பல்கலை கழகங்களை இங்கே அனுமதித்தால் 75 சதவிகித மாணவர்கள் நம் நாட்டிலேயே தங்கி விடுவார்கள். அதனால் இந்தியா 7.5 பில்லியன் அமெரிக்க டாலரை மிச்சப்படுத்தலாம் என்று கூறுகிறது. அன்னியச் செலவாணி இந்த வகையில் நமக்கு ஆதாயமாகும். ஆனால், இது வெறும் வாய்ப்பந்தல்தான். நடைமுறைக்குச் சரிப்பட்டு வராத, இந்தக் கொள்கைக்கு ஆதரவாளர்கள் அதிகம். 80 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குச் செல்வதெல்லாம் பட்ட மேற்படிப்பு படிக்கவும் விடுமுறையைக் கழிக்கவும்தான். 

இந்தியாவிற்கு வெளியே தங்கள் படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளவே செல்கிறார்கள். வெளிநாட்டில் கல்வி பயில்வது என்பது, உலக வேலை வாய்ப்பிற்கு ஓர் அனுமதிச் சீட்டு என்றே அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அகில இந்திய வணிகப் பேரவை, ‘மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கி விடுவார்கள்’ என்று எப்படி எதிர்பார்க்க முடிகிறது? 

இங்கே ஹார்வர்டோ, ஸ்டேன்போர்டோ ஒருநாளும் வரப் போவதில்லை. முகம் தெரியாத பல்கலைக் கழகங்கள்தான் வரக் காத்திருக்கின்றன. இத்தகைய பல்கலைக் கழகங்கள் தரம் மிக்க ஆராய்ச்சிக் கல்வியையும், பட்ட மேற்படிப்புக் கல்வியையும் தரக்கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்தவையா என்றால் அதுதான் இல்லை. வல்லமை பெற்றவர்கள் வரத் தயங்குகிறார்கள், ஏன்? நாம் சிந்திக்க வேண்டும். வரவு செலவு அறிக்கையில் கல்விக்குரிய ஒதுக்கீட்டிலுள்ள கடுமையான வெட்டும், உயர்ந்து வரும் கல்விக் கட்டணமுமே அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களை மாற்று வழி கண்டுபிடிக்கக் கட்டாயப்படுத்துகின்றன. பணம் சம்பாதிக்க புதிய புதிய சந்தை உத்திகளைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்கள். இப்படிக் காசேதான் கடவுளடா என்று இருப்பவர்களால், பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கல்வியைத் தரம் குறையாமல் இந்தியாவில் தர முயற்சிப்பார்களா? அது ஒருபோதும் இல்லை. 

வெற்றிக்கொடி நாட்டிய அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள் எல்லாம், தங்கள் வருமானத்துக்கு பிற நாட்டு மாணவர்களின் பட்ட மேற்படிப்புக் கல்விக் கட்டணத்தையே பெரிதும் நம்பி இருக்கின்றன. இந்தியாவும் சீனாவும்தான் இந்நாடுகளுக்கு மாணவர்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் உள்ளன. புத்திசாலித்தனம் வாய்ந்த எந்த அன்னியப் பல்கலைக் கழகமும் இந்தியாவில் பட்ட மேற்படிப்புக் கல்வியை வழங்க முன் வராது. அது தற்கொலைக்குச் சமமாகும். நுனி மரத்திலிருந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போலாகும் அச்செயல். பிறகு என்னதான் செய்வார்கள்? இந்தியாவில் உள்ள சாதாரண கல்லூரியைப் போலக் காலங்காலமாக உள்ள கிளிப்பிள்ளைக் கல்விமுறையைத்தான் பின்பற்றுவார்கள். கல்விக் கட்டணமோ உச்சாணி கிளையை எட்டிப் பிடிக்கும். அவர்களையெல்லாம் எந்தக் கட்டுப்பாட்டிற்கும் சட்டத் திட்டத்திற்குள்ளும் கொண்டு வர முடியாது. ஏனென்றால், அவர்கள்தான் அயல்நாட்டவர்கள் ஆயிற்றே? நடக்குமா? எனவே, அகில இந்திய வணிகப் பேரவையின் சேமிப்புக் கோட்பாடு ஒரு கானல் நீராகத்தான் இருக்கும். 

பெரிய பெரிய வரவு செலவுத் தணிக்கையாளர்கள் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் பணத்தைக் கொண்டு சேர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அந்தக் கலையில்தான் அவர்களுக்கு நல்ல பயிற்சி இருக்கிறதே! எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட்டு, தன்னலம் ஒன்றை மட்டுமே கொண்டு, பண வேட்டையாடுவதுதான் அவர்களின் குறிக்கோள். இது நிதிக் கண்ணோட்டம். கூடாரத்தில் ஒட்டகத்திற்கு இடம் கொடுத்ததை போல வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தவர்களை இங்கே அனுமதித்தால், இந்தியாவில் உள்ள ஆசிரியர்களை கவர்ந்து, இங்கு இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுவார்கள். தற்பொழுது இருக்கும் பற்றாக்குறையே பெரிது. மேலும் நிலைமை மோசமாகி விடும். இப்படிப்பட்ட ஒரு சூழல் இந்தியாவின் உயர்கல்வி முறையை உயர்த்தி விடுமா? நிச்சயமாக இல்லை. எல்லாம் மாயா பஜார்தான். 

அயல்நாட்டுப் பல்கலைக் கழகத்தவர்களின் உதவி இல்லாமலேயே நம் உயர் கல்வியின் தரத்தை வலிமைப்படுத்த முடியாதா? ஏன் முடியாது? கட்டாயம் முடியும். எத்தனையோ வழிகள் உள்ளன. சீனாவின் ஆசைத் திட்டம் 211 மற்றும் 985, நூறு உயர் பல்கலைக் கழகங்களையும், நாற்பது உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களையும் ஏற்படுத்துவதுதான். இது நல்ல நோக்கம். சீன நாட்டின் தனித் தன்மையைப் பிரதிபலிக்கும் பல்கலைக் கழகங்களை ஏற்படுத்துவதில்தான் அது கண்ணும் கருத்துமாக உள்ளதே தவிர, வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இறக்குமதி செய்வது அதன் நோக்கம் இல்லை. சீனாவை விட்டு இளைஞர்கள் வெளியேறக் கூடாது என்பதற்காக, அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களை வரவழைக்கவும் அவர்கள் நினைக்கவில்லை. சீனாவின் முன்மாதிரியை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். 
வெளிநாட்டவர்களுக்குத் தாரைவார்ப்பதை விட்டுவிட்டு, உள்நாட்டிலேயே, அதன் தனித்தன்மை கெடாத வகையில், உலகத் தரமிக்க பல்கலைக் கழகங்களை நம்மால் உண்டாக்க முடியும். அப்படியே அவர்களை அனுமதிப்பதாக இருந்தாலும், அவர்கள் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கல்வியை எடுத்து கொள்ளட்டும். பத்தாண்டுக் காலம் தங்களுடைய ஆசிரியர்களை கொண்டே கூட, அவர்கள் நடத்திக் கொள்ளட்டும். அவர்களுடைய உண்மை தன்மையை சோதித்தறிய இது ஒரு வாய்ப்பாக அமைவதோடு, இந்தியக் கல்வி முறைக்கு, கற்பிக்கும் நல்ல ஆசிரியர்களை வழங்கிய பெருமையும் அவர்களுக்குக் கிடைக்கும். 

சமீப காலத்தில் அரசு கொல்லைப்புற வழி ஒன்றை ஏற்படுத்தி, அவர்களை இந்தியாவுக்குள் வர முயற்சி மேற்கொண்டது. நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை அவற்றுக்கு வழங்கி, மெதுவாக இந்தியாவிற்குள் வர பச்சைக் கொடி காட்டியது அரசு. ஆனால், பல்கலைக் கழக மானியக் குழுவே இதற்கு மறுப்புத் தெரிவித்தது. எதிர்ப்பு பூதாகாரமாகக் கிளம்பியதைப் பார்த்து அரசு மெதுவாகப் பின் வாங்கியது. 500 பல்கலைக் கழகங்களை மட்டுமே அனுமதிப்பது என்றும் முடிவு செய்து, அதற்குரிய சட்டத் திட்டங்களை வகுக்கத் தொடங்கியது. இந்த அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள், மதிப்பீடு செய்யப்பட்ட இந்திய பல்கலைக் கழகங்களோடு ஒருங்கிணைந்துதான் செயல்பட வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. இது ஏற்கத்தக்கதே. 

அமெரிக்காவும் இங்கிலாந்தும் உயர்கல்வி நிலையில் பல சோதனைகளைச் சந்திக்கும் வேளையில், இந்தியாவும் தன்னை ஆத்ம சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். மெச்சத் தகுந்த உயர் கல்வி முறையைத் தொடங்க இதுவே சரியான சமயம், நம்மிடத்தில் இல்லாத மூலாதாரங்களா? அவற்றையெல்லாம் மனதில் கொண்டு, உலகத் தரம் மிக்க பல்கலைக் கழகங்களை உருவாக்க வேண்டும். முதலில் இந்தியாவுக்குத் தேவைப்படுவது ஆசிரியர்களின் தரம் குறித்த தேசிய அளவிலான வலுவான கொள்கை. அரசு விழித்துக் கொள்வதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம். நம் நாட்டில் ஆசிரியர் கல்வி முறையில் அதலபாதாளத்தில் உள்ள மேடு பள்ளங்களைக் கண்டறிந்து, அதற்குப் புனர்ஜென்மம் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செயல்படுத்துவதில் எது தடையாக இருக்கிறது, அதைக் களைய என்ன வழி என்பதை இனிவரும் கட்டுரையில் பார்க்கலாம். 

– பேராசிரியர் ஆர். சேதுராமன்,
துணை வேந்தர், சாஸ்த்ரா பல்கலைக் கழகம்
 

இந்தியாவில் ஆசிரியர் கல்வி – ஒரு கண்ணோட்டம்

இந்தியாவில் ஆசிரியர் கல்வி – ஒரு கண்ணோட்டம் 


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2004–ல், NCTE –ன் மண்டல இயக்குநர் அலுவலகங்களைப் பற்றிக் கூறப்பட்ட லஞ்சப் புகார்களை விசாரிக்க சிறப்புக் குழுக்களை அமைத்தது. NCTE –ன் மண்டல இயக்குனரகம், நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ள கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது என்பதை அக்குழு தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியது. பார்வையிடச் சென்ற ஆய்வுக்குழு உறுப்பினர்களிடம், தேவையான எந்த ஆவணத்தையும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் சமர்ப்பிக்கவில்லை. இல்லாத கல்லூரிகளை இருப்பது போல் காட்டி NCTE அனுமதி வழங்கி விடுகிறது என்பதை, இக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வடமாநிலத்தின் கவர்னர் ஒருவர் NCTE –ன் செயல்பாடு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ‘மாட்டுக்கொட்டகை ஒன்றில் இயங்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றிற்கு NCTE –அங்கீகாரம் அளித்துள்ளது’ என்று குற்றம் சாட்டினார். எந்தவிதமான கால ஒழுங்கு முறையையும்NCTE பின்பற்றியதாகத் தெரியவில்லை. ஒருபுறம் அங்கீகாரத்திற்காக ஆண்டாண்டுக் காலமாக ஆய்வுக்குழுவின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துப் பல கல்லூரிகள் காத்திருந்த நிலையில், மறுபுறம் சில நாட்களிலேயே சில கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டன. ஆய்வுக்குழுவின் நேரடி வருகை இல்லாமலேயே சில கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றன என்று, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்ட குழு கூறியுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் என்று வசூலிக்கப்பட்ட தொகை, அந்த வருடம் (2007) பதினைந்து கோடி ரூபாயையும் தாண்டி விட்டதாக அது கூறுகிறது. ஆசிரியர் கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி, தேசிய ஆசிரியர் கல்விக் கழக வங்கிக் கணக்குகளில் உறங்குகின்றன. அது வங்கியின் நடப்புக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் சென்று நீதி கேட்டுப் பலர் வழக்குத் தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றம், தென் மண்டல NCTE இயக்குனரை நீதிமன்ற அவமதிப்பிற்காக நேரே ஆஜராகச் சொன்னதை இங்கு குறிப்பிடலாம். மண்டலக் குழு கூட்டிய கூட்டத்திலும், அதன் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சாடிக் கொண்டனர். அது மட்டுமில்லாமல் இத்தகைய கூட்டத்தை முறையாக நடத் தியதாகவும் தெரியவில்லை என்று இக்குழுவின் அறிக்கை கூறுகிறது.

பல்வேறு திசைகளிலிருந்து புகார்கள் குவிவதைக் கண்ட மத்திய அரசு, NCTE –ன் செயல்பாடுகளை மறுமதிப்பீடு செய்ய குழு ஒன்றை அமைத்தது. மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர் சுதீப் பானர்ஜி இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இக்குழு தன் அறிக்கையை 2008–ல் சமர்ப்பித்தது. ’NCTE –யில் திட்டமிடலோ, ஒருங்கமைப்போ’ கல்வி தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய தரவுகள் தருவதோ ஏதும் இல்லை என்று இக்குழு திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. திட்டமிட்ட வளர்ச்சி, கல்விசார் ஆய்வு, புதுமை நாட்டம் ஆகிய அம்சங்களை இது முற்றிலும் உதறித் தள்ளிவிட்டது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு வெறும் அங்கீகாரம் வழங்கும் ஆணையமாக மட்டுமே இது செயல்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஆசிரியர் கல்வி – ஒரு கண்ணோட்டம் 
புகழ்வாய்ந்த ‘நியூயார்க் டைம்ஸ்’ என்ற தினசரி, ஜனவரி 2012–ல் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ஹார்வர்டு மற்றும் கொலம்பிய பல்கலைக் கழகங்களின் பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை அது வெளியிட்டது. அங்கே, ஒரு நல்ல ஆசிரியர் பள்ளியை விட்டு விலகுகிறார் என்று தெரிய வந்தால், பெற்றோர்கள் பீதியடைந்து, அவர் மேலும் ஒரு வருஷம் தொடர்ந்து இருப்பதற்கு 1,00,000 அமெரிக்க டாலரை ஊக்கத் தொகையாக அளிக்க முன்வருவார்களாம். காரணம், அந்த ஆசிரியரால் அவர்களுடைய பிள்ளைகள் அடையும் பயன் அவர்கள் அளிக்கும் தொகையை விட அதிகமாம். இதேபோல, ஒரு மோசமான ஆசிரியர் பணியில் இருந்தால், அந்த ஆசிரியருக்கும் அதே தொகையை அளித்து, பணியை விட்டு வெளியேற்றவும் பெற்றோர்கள் முன் வருவார்கள். காரணம், ஒரு மோசமான ஆசிரியர் என்பவர், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஒரு அபாயம் என்று கருதுவதால்தான். இவ்வாறு, தரம் தாழ்ந்த கற்பித்தலுக்கெல்லாம் முடிவு கட்டுவது தேவை என்பதை நினைக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.

‘நல்ல ஆசிரியர்களுக்கு அள்ளிக் கொடுங்கள்! மோசமானவர்களுக்குக் கிள்ளிக் கொடுங்கள்!’ என்று நான் சொல்ல மாட்டேன். ஆசிரியர் தொழிலை வாழ்வாதாரத்திற்குரிய ஒன்றாகத் தேர்ந்தெடுக்கும்போது, அதனுடைய மதிப்பு எத்தகையது என்பதை நாம் உணர வேண்டும். ஆசிரியர் தொழில் எவ்வளவு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியது என்பதை விளக்க உதாரணங்கள் தருகிறேன். பிரணாப் முகர்ஜி மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, தற்போதைய பிரதம மந்திரியாக இருக்கும் மன்மோகன் சிங், ரிஸர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார். நிலைமை மாறியபோது மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராகச் செயல்பட்டார் பிரணாப் முகர்ஜி. ஆனால், இவ்விருவருக்கும் எல்.கே.ஜி.யில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் இன்று உயிரோடு இருந்தால் கூட, பிரணாப் முகர்ஜியையும், மன்மோகன் சிங்கையும் தங்கள் மாணவர்கள் என்றே கூறுவார்கள்.

காரணம், ஆசிரியர் – மாணவர் உறவு என்பது என்றுமே மாறாதது. ‘டெல்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளை’ என்ற வாசகத்திற்கேற்ப, மாணவன் என்பவன் மாணவன்தான். இதை, எந்தக் காலத்திலும் ஓர் ஆசிரியர் பெருமிதத்தோடு கூறிக் கொள்ள முடியும். அப்துல் கலாம் கூட தனக்கு சயின்ஸ் பாடம் கற்பித்த ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயரை நன்றியோடு நினைக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா, தனது பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு, தன்னுடைய ஆசிரியருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா தன்னுடைய ‘வீ த பீப்பிள்’ (We the People) என்ற புத்தகத்தில் கூட, தன்னுடைய ஆசிரியரைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையே எழுதியுள்ளார்.

ஆசிரியர் கல்வியைப் பற்றி அமெரிக்கக் குழு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘மக்களின் தரத்தை வைத்துத்தான் நாட்டின் தரம் மதிப்பிடப்படுகிறது. மக்களின் தரம் அவர்கள் பெற்ற கல்வியின் அடிப்படையில் அமைகிறது. ஆசிரியர்களின் தரத்தைக் கொண்டுதான் கல்வியின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது’ என்பது அவ்வறிக்கையின் சாராம்சம். முறையான ஆசிரியர் கல்வி முறையின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. ஏனென்றால், ஆசிரியர் கல்வி என்பது நாட்டின் வளர்ச்சியில் நேரடியான பாதிப்பை உண்டாக்குகிறது.

புனிதமாகப் போற்றத்தக்க ஆசிரியர் தொழில், இன்று, அவலநிலைக்குத் தள்ளப்பட்டு, வேறு எந்த வேலையும் கிடைக்காதபோது வேண்டா வெறுப்பாகப் பெரும்பாலானோர் நாடுகிற தொழிலாகி விட்டது. மாதா – பிதா – குரு – தெய்வம் என்று, வணங்கத்தக்க வரிசையில் உள்ள குருவுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் குறைந்து விட்டது. ‘குருபக்தி’ என்கிற சிந்தனையே நாளுக்கு நாள் மறைந்து வருகிறது. குருவுக்கும் பக்திக்கும் புத்துயிர் கொடுக்க வேண்டிய தேவை உண்டாகி விட்டது. 2006–ல் தேசிய கல்விக் குழு அவசரச் சட்டம் ஒன்றைப் பிரகடனப்படுத்தியது. இதன்படி, அங்கீகாரம் வழங்கப்படாத ஆசிரியர் பயிற்சிக் கழகங்களுக்கு அவை விண்ணப்பித்த நாளிலிருந்து அனுமதி வழங்கப்பட்டது. இதற்குக் காரணம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச், அங்கீகாரம் பெறாத 115 ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் பயின்ற மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தீர்ப்பு வழங்கியது. NCTE யினால் அங்கீகரிக்கப்படாத கல்வி நிலையங்களில் பயின்ற மாணவர்கள், தங்களிடம் உள்ள சான்றிதழ்களைக் கொண்டு எந்தக் கல்வி நிலையத்திலும் வேலை வாய்ப்புப் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் தன் தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தீர்ப்பு 2006 ஏப்ரலில் வழங்கப்பட்டது.

NCTE –ன் அனுமதி பெறாமல் பி.எட். பட்ட வகுப்புகளை நடத்திய கல்வி நிலையங்களின் அனுமதியை ரத்து செய்தும் அது உத்திரவிட்டது. இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவசரச் சட்டத்தை அப்போதைய அரசு பிறப்பித்தது. பின்னர், இதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்காமல், ஆறு மாத காலம் இந்த அவசரச் சட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த அவசரச் சட்டம் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமலேயே நிறைவேறியது. மேற்கு வங்கத்தில் உள்ள இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி நடத்த வேண்டிய நிலை அன்று இருந்ததால், மத்திய அரசு இப்படிப்பட்ட ஒரு முடிவை மேற்கொண்டது. இந்த முடிவு, அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2000–ல் ஆனந்த் சரூப் குழுவை நியமித்தது. அங்கீகாரமில்லாமல் போலியாக பி.எட். பட்டம் வழங்கும் கல்வி வியாபாரக் கடைகள் பற்றிய தகவல்களைக் கண்டறிவதற்காகத்தான் இது அமைக்கப்பட்டது. அரசியல் தலையீட்டினால் அதன் அறிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்தக் கல்வி முறையைச் சீர் செய்ய எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 
NCTE – ஆரம்பக் கல்வியை உதாசீனப்படுத்தி, மேலும் மேலும் நடுநிலைப் பள்ளிக்கான ஆசிரியர் பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி அளித்தது. கடந்த 15 வருடங்களாக NCTEஆசிரியர் தரத்திற்கோ அல்லது ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பு வரம்பிற்கோ எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை’ என்று, இக்குழு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘இப்படி உள்ள சூழ்நிலையில் NCTE –ஐ வைத்திருப்பதில் என்ன பயன்? இதைக் கலைத்து விட்டு அதிகாரங்களைப் பல்கலைக் கழகங்களுக்குப் பகிர்ந்தளித்து விடலாம்’ என்று இந்தக் குழு கூறியிருப்பது மிகவும் பொருத்தமானது.

பானர்ஜி குழுவின் பரிந்துரையைப் பொருட்படுத்தாமல் NCTE இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எந்த அதிகாரத்தையும், எந்தப் பல்கலைக் கழகத்திற்கும் கொடுக்காமல், தானே தன்னிச்சையாகச் செயல்படுகின்றது. ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்று தி.மு.க. சொல்லி வருகிறது. ஆனால், அது NCTE –ன் விஷயத்தில் தலையிடுவதற்குரிய வாய்ப்பு முந்தைய தி.மு.க. அரசுக்கு வந்தபோது, அதைப் பயன்படுத்த முன்வரவில்லை. இப்போதைய அரசு தலையிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆசிரியர் கல்வி முறையை மேம்படுத்த வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆசிரியப் பணியின் மேன்மையை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.

– பேராசிரியர் ஆர். சேதுராமன், துணை வேந்தர், சாஸ்த்ரா பல்கலைக் கழகம் 

Saturday 3 November 2012

மாணவர்களே பள்ளியை நடத்தும் அவலம்



















மூன்றாண்டுகளுக்கு முன்னால் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அனைத்து மாநில அரசுகளும் இச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வசதிகளைப் பள்ளிகளில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கூறி யுள்ளது. ஆனால் கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் தொடங்கி கட்டட வசதி, ஆசிரியர் பற்றாக்குறை வரை பல்வேறு   குறை பாடுகள் நீடிப்பதைச் சென்றவாரம் சென்னையில் நடந்த பொது விசாரணை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.
தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நடத்திய இந்தப் பொதுவிசாரணையில், பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 250 பஞ்சாயத்துகளிலிருந்து 57 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளிகளின் பிரச்னைகள் இந்த பொது விசாரணையில் பேசப்பட்டன. உள்கட்டமைப்பு வசதிகள், மதிய உணவுத்திட்டம், பள்ளி நிர்வாகக் குழு அமைத்தல், ஆசிரியர் & -மாணவர் போதாமை குறித்த பிரச்னைகள் குறித்து பதில்சொல்வதற்காகத் தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதாவும் கலந்துகொண்டு பதில்சொன்னது சாதகமான விஷயம் என்கிறார் இப்பொதுவிசாரணை நடுவர்களில் ஒருவரான முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி.
“கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் பள்ளி நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்தப் பள்ளியிலும் இது அமைக்கப்படவேயில்லை. 75 சதவிகிதம் பெற்றோர் பிரதிநிதிகளும், 2 5 சதவிகிதத்தில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூகப்பிரதிநிதிகள் இருத்தல் வேண்டும். அவர்கள் தான் பள்ளியின் உள்கட்டுமான வசதிகளைத் திட்டமிட்டுச் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். கல்வி என்பது அதிகாரிகள் கையில் இல்லாமல் மக்கள் கையில் அப்போதுதான் செல்லும். உலகில் தரமான கட்டாய இலவசக்கல்வியை வெற்றிகரமாக அமல் செய்திருக்கும் நாடுகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகள் வழியாகவே நிர்வகிக்கின்றன. அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் கிராமக்கல்விக் கமிட்டி என்று ஒரு குழு அமைக்கப் பட்டது. அதுமட்டுமே இப்போது நடைமுறையில் இருக்கிறது. அந்தக் குழுவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவை கலைக்கப்பட்டு முறையான பள்ளி நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும்” என்கிறார்.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லையென்பதும் இந்தப் பொதுவிசாரணைக்காக மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாகக் கூறுகிறார் இதன் ஒருங்கிணைப்பாளரான, மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஜி.கணேசன். “பல பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாமல் இருக்கிறது. கழிப்பறைக் கட்டடம் இருக்கும் பள்ளிகளில் போதிய பராமரிப்பின்றி மிகவும் அருவருப்பான சூழ்நிலையில் இருக்கின்றன. சில பள்ளிகளில் மாணவர்களின் அளவுக்கு ஏற்ப கழிப்பறைகள் இல்லை. 300 மாணவர்களுக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டும் போதுமா? கழிப்பறைகள் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் வெளியே சென்று சமாளித்துக் கொள்கின்றனர். மாணவிகளின் பிரச்னைதான் கழிப்பறை விஷயத்தில் மிகவும் கொடுமையானது. பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால், தண்ணீர் குடிக்காமலேயே பள்ளி நேரத்தைக் கழிக்கிறார்கள்.” என்கிறார்.
டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்த வழக்கு ஒன்றில் அக்டோபர் 3 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைத்து மாநில அரசுகளும் ஆறு மாதங்களில் உறுதி செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 46 சதவிகிதம் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லையென்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தப் பொதுவிசாரணையில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்கள் ஆசிரியரோ, தலைமை ஆசிரியரோ இல்லாமலேயே பள்ளிகளை மாணவர்களே பெரும்பாலும் நடத்துவதாகத் தெரிவித்தது அங்கிருந்த அரசு அதிகாரிகளுக்கே புதிய தகவலாக இருந்தது. மாணவர்களே காலையில் பிரார்த் தனை நடத்தி மாணவர்களே மணி யடிக்கும் நடைமுறைகளும் உள்ள தாகத் தெரியவந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள்தான் அதிகம் கவனிப்பாரற்று இருப்பதாக வசந்தி தேவி வருத்தம் தெரிவிக்கிறார். “இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், குழந்தைகளாகவே மதிக்கப் படுவதில்லை. ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஒரு தலைமை ஆசிரியர் விடுமுறை போட்டுவிட்டு சம்பளமும் வாங்கிக்கொண்டு இந்த குழந்தை களுக்குக் கல்வி வாய்ப்பு கெடுவது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தனது வீட்டில் உட்கார்ந்திருக்கும் நிலைமையை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்” என்கிறார். ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் நிலை இதுவென்றால், ஆதிதிராவிட மாணவர்களுக்கென அமைக்கப்பட்ட அரசு விடுதிகளின் நிலையோ இன்னும் மோசம். பாம்புகள், நாய்கள், மாடுகள் பகல் நேரத்தில் விடுதி சமையலறை வரை செல்வது சகஜம் என்கிறார் மனித உரிமை ஆர்வலர் மணிமாறன்.
ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாளர் தட்டுப்பாடு இருப்பதும் இந்த பொதுவிசாரணையில் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சம் 500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு அதிகாரிகளே தெரிவித்தனர். கடலூரில் உள்ள அரசுப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். ஆய்வகப் பணியாளர்கள் இல்லாததால் அப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் மாணவர்களிடமே அதைச் சுத்தம் செய்யச் சொன்னதுதான் இந்த இறப்புக்குக் காரணம். பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது மேம்பட்டிருப்பதாக கூறுகிறார் கல்வி உரிமை ஆர்வலரான மு.முருகேஷ். இன்று வசதிகள் மேம்பட்டிருக்கின்றன. பள்ளித் தளவாடங்களைப் பயன் படுத்து வதிலும் பராமரிப்பதிலும்தான் சுணக்கம் நிகழ்கிறது” என்கிறார்.
பள்ளிக்கு வரும் குழந்தைகள் தொடர்ந்து வகுப்பறை வன் முறைகளுக்கு  உள்ளாவதும், விரக்தியில் தற்கொலை செய்த சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மாணவிகள், ஆசிரியர் களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் புகார்களும் சொல்லப்பட்டன. இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா, ‘துறைசார்ந்த நடவடிக்கையோடு, குற்றவழக்கும் அத்தகைய ஆசிரியர்கள் மீது பதியப்பட வேண்டும்” என்றார். இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தை களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீடு அமல்செய்யப்படும் விஷயத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்பதை இந்தப் பொதுவிசாரணை உறுதிசெய்தது. இந்தப் பொது விசாரணையில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ் செல்வி பதில் சொன்னபோது, குழந்தைகள் சேர்க்கை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும்  பதில் சொன்னார்.
“இச்சட்டமே கல்வி உரிமையை குழந்தைகளுக்குக் கட்டணமின்றி உறுதிசெய்யும் சட்டம்தான். தனியார் பள்ளிகளைப் பாதுகாப்பது அல்ல.” என்று வசந்திதேவி விரக்தியாக கூறுகிறார். கட்டாயக் கல்விச் சட்டம் அமலானால் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் நியமனம், நிதி ஒதுக்கீடு, பள்ளி நிர்வாகக்குழு மூலம் வெளிப்படைத் தன்மை என்று பல வளர்ச்சிகள் ஏற்படும். ஆனால் தமிழக அரசு எவ்வளவு முடியுமோ அந்த அளவு கட்டாயக் கல்வி விஷயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரு கிறது.  இலவச கட்டாயக் கல்விக்கு மத்திய அரசு தன் பங்காக மாநிலங் களுக்கு தரவேண்டிய பணத்தையும் படிப்படியாக குறைத்து வருவதாகவும் வசந்தி தேவி கவலை தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்கட்டுமானம் தொடங்கி பள்ளிகள் அங்கீகாரம்  அங்கீகாரம் வரை தமிழக அரசு பல நடவடிக்கை களில் பின்தங்கியே உள்ளது.    









Tuesday 25 September 2012

அர்த்தமுள்ள இந்து மதம் -கவியரசு கண்ணதாசன்


இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் என்பதை எளிய
விளக்கங்களுடன் கண்ணதாசன் போல் யாரும் சொல்ல முடியாது. நாத்திகனாக இருந்து
கம்பனை விமர்சிக்க ராமாயணம் படித்து, ஆன்மீகவாதிக மாறிப்போன ஒரு பெரும் புலவனின் சொற்பொழிவை தரவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

Download MP3

PART 1

PART 2

PART 3

PART 4

PART 5

PART 6

அத்தனைக்கும் ஆசைப்படு


சத்குரு ஈஷா அவர்கள்  யோகாவை விஞ்ஞானக் கருவியாகப் பயன் படுத்தி பல லட்சம் மனிதர்களை மேம்படுத்தி சமூகத்திற்கும் அர்ப்பணித்தவர். அத்தனைக்கும் ஆசைப்படு! விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டது.

DOWNLOAD

சுயசரிதம் – உலக மாமனிதர்களின் வாழ்கை வரலாறு

இளைஞர்கள் காலம் – டாக்டர் அப்துல் கலாம்


இளைஞர்கள் காலம் என்ற தலைப்பில் நக்கீரன் பத்திரிகையில்  டாக்டர் அப்துல் கலாம் எழுதிய தொடர். இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் தொடர் ! இளைய தலைமுறைக்கான  தன்னம்பிக்கைத் தொடர்!
டவுன்லோட் செய்ய கீழே சொடுக்கவும்

DOWNLOAD